சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

12.450   சேக்கிழார்   பொய்யடிமை யில்லாத புலவர் சருக்கம்

-
பேருலகில் ஓங்குபுகழ்ப்
பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை
நிருத்தர்திருப் பதியாகும்
காருலவு மலர்ச்சோலைக்
கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி
சிறந்ததிரு வொற்றியூர்.

[ 1]


இப்பேருலகில் புகழினால் ஓங்கிய பெருமை பொருந்திய தொண்டை நாட்டில், கங்கை பொருந்திய சடைத் தொகுதி யையுடைய கூத்தப்பெருமான் எழுந்தருளியுள்ள பதி, மேகங்கள் தவழும், மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த மதில் பக்கம் எல்லாம், தேர் உலவுவதற்கு இடமான நீண்ட வீதிகளையுடைய திருவொற்றியூர் என்ற பதியாகும். *** கன்னி மதில் - அழியாத மதில். காருலவும் மதில் எனக் கூட்டுக.
பீடுகெழு பெருந்தெருவும்
புத்தருடன் பீலிஅமண்
வேடமுடை யவர்பொருள்போல்
ஆகாச வெளிமறைக்கும்
ஆடிகொடி மணிநெடுமா
ளிகைநிரைகள் அலைகமுகின்
காடனைய கடல்படப்பை
யெனவிளங்குங் கவின்காட்டும்.

[ 2]


கன்னி மதில் - அழியாத மதில். காருலவும் மதில் எனக் கூட்டுக. *** கன்னி மதில் - அழியாத மதில். காருலவும் மதில் எனக் கூட்டுக.
பன்னுதிருப் பதிகஇசைப்
பாட்டுஓவா மண்டபங்கள்
அன்னநடை மடவார்கள்
ஆட்டு ஓவா அணியரங்கு
பன்முறைதூ ரியமுழங்கும்
விழவுஓவா பயில்வீதி
செந்நெல்லடி சிற்பிறங்கல்
உணவுஓவா திருமடங்கள்.

[ 3]


யாவராலும் பலமுறையும் ஓதப்பெறும் திருமுறைப் பதிகங்களின் இசைப் பாட்டுக்கள் மண்டபங்கள் தொறும் நீங்காமல் ஒலிப்பன. அன்னம் போன்ற நடையையுடைய பெண்களின் ஆடல்கள் அரங்குகளில் நீங்காமல் நிகழ்வன. மக்கள் பழகும் வீதிகள் முறையாக ஒலிக்கும் இயங்களின் ஒலியுடன் கூடிய விழாக்களை நீங்காது உடையனவாய்த் தோன்றின. திருமடங்கள் செந்நெல் அரிசியால் சமைக்கப்பட்டு மலைபோல் குவியல் ஆக்கிய உணவுப் பெருக்கத்தினை நீங்காமல் உடையனவாய் விளங்கின. *** ஓவா என வருவன நீங்காதிருந்தமையைக் குறித்து நின்றன. தூரியம் - இசைக்கருவிகள்; இதனால் இங்குள்ள மக்களின் பத்திமையும் மகிழ்ச்சியும் விளங்குகின்றன. உணவு ஓவா திரு மடங்கள் 'சோறு மணக்கும் மடங்கள் எல்லாம்' (சேக்கிழார் பிள்ளைத் தமிழ்) எனப் பிள்ளையவர்கள் கூறியதும் இதுபற்றியேயாம்.
கெழுமலர்மா தவிபுன்னை
கிளைஞாழல் தளையவிழும்
கொழுமுகைய சண்பகங்கள்
குளிர்செருந்தி வளர்கைதை
முழுமணமே முந்நீரும்
கமழமலர் முருகுயிர்க்கும்
செழுநிலவின் துகளனைய
மணற்பரப்புந் திருப்பரப்பு.

[ 4]


நிறைந்த மலர்களையுடைய மாதவியும் புன்னையும், கிளைத்து வளரும் குங்கும மரங்களும், இதழ்கள் விரியும் செழுமை யான முகைகளையுடைய சண்பக மரங்களும், குளிர்ந்த செருந்தியும், தாழையும் ஆகிய மரங்கள், கடல் நீரும் மணக்கத் தத்தம் மலர்களின் மணத்தைத் தருவன. செழுமையான நிலவின் ஒளியே துகளாக விளங்குவதைப் போல, ஆங்குள்ள மணற்பரப்பு, தூய்மையும் வெண்மையும் கொண்டு விளங்கியது.
குறிப்புரை:

எயிலணையும் முகில்முழக்கும்
எறிதிரைவே லையின்முழக்கும்
பயில்தருபல் லியமுழக்கும்
முறைதெரியாப் பதியதனுள்
வெயில்அணிபல் மணிமுதலாம்
விழுப்பொருளா வனவிளக்கும்
தயிலவினைத் தொழின்மரபில்
சக்கரப்பா டித்தெருவு.

[ 5]


மதில்களைச் சூழ நிற்கும் மேகங்களின் ஒலியும், வீசும் அலைகளையுடைய கடலின் ஒலியும், பயிலப்படும் இசை பொருந்திய பல இயங்களின் ஒலியும் ஆகிய இவ்வொலிகள், இன்ன இன்னதன் ஒலி எனப் பிரித்து அறியஇயலாதவாறு ஒலிக்கின்ற அந்நகரத்தில், எண்ணெய் ஆட்டும் செக்குத் தொழிலையுடைய மரபினர் வாழ்கின்ற 'சக்கரபாடித் தெரு' என்பது ஒன்றாகும். அது ஒளிவீசும் பலவகை மணிகள் முதலான தூய்மையான பொருள்கள் பலவற்றையும் கொண்டு விளங்கும். *** தயிலவினைத் தொழில் - எண்ணெய் எடுக்கும் செக்குத் தொழில். சக்கரம் - செக்கு; அது கொண்டு தொழில் புரிவார் செக்கார் எனப் பெறுவார்.
Go to top
அக்குலத்தின் செய்தவத்தால்
அவனிமிசை அவதரித்தார்
மிக்கபெருஞ் செல்வத்து
மீக்கூர விளங்கினார்
தக்கபுகழ்க் கலியனார்
எனும்நாமந் தலைநின்றார்
முக்கண்இறை வர்க்குஉரிமைத்
திருத்தொண்டின் நெறிமுயல்வார்.

[ 6]


அக்குலம் செய்த முன்னைத் தவத்தினால் உலகத்தில் தோன்றியவர், மிகப்பெருஞ் சைவ சமயநெறி மேலோங்க விளங்கிய வர், அவர் 'கலியனார்' எனும் பெயர் கொண்டு சிறந்து நின்றவர். அவர், மூவிழிகளையுடைய சிவபெருமானுக்கு உரிமையான திருத் தொண்டு நெறியில் ஒழுகி வரலானார்.
குறிப்புரை:

எல்லையில்பல் கோடிதனத்
திறைவராய் இப்படித்தாம்
செல்வநெறிப் பயனறிந்து
திருவொற்றி யூரமர்ந்த
கொல்லைமழ விடையார்தம்
கோயிலின்உள் ளும்புறம்பும்
அல்லும்நெடும் பகலுமிடும்
திருவிளக்கின் அணிவிளைத்தார்.

[ 7]


அளவற்ற பல கோடி செல்வத்துக்குத் தலைவராகிய அவர், அச்செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து, திருவொற்றி யூரில் விரும்பி வீற்றிருக்கின்ற ஆனேற்றை ஊர்தியாகவுடைய இறை வர் தம் கோயிலின் உள்ளேயும் வெளியேயும், இரவிலும் விரிந்த பகற்போதிலும், இடும் திருவிளக்குப் பணியினை மேற்கொண்டார். *** கொல்லை - முல்லை நிலம்; விடை வளர்தற்குரிய இடன் அஃது ஆதலின் அவ்வுரிமை தோன்றக் 'கொல்லை மழவிடை' என்றார்.
எண்ணில்திரு விளக்குநெடு
நாளெல்லாம் எரித்துவரப்
புண்ணியமெய்த் தொண்டர்செயல்
புலப்படுப்பார் அருளாலே
உண்ணிறையும் பெருஞ்செல்வம்
உயர்த்தும்வினைச் செயல்ஓவி
மண்ணிலவர் இருவினைபோல்
மாண்டதுமாட் சிமைத்தாக.

[ 8]


எண்ணற்ற திருவிளக்கிடுதலை நீண்ட நாள்கள் முழுமையாகச் செய்து வரவே, அச்சிவ புண்ணியத்தின் உறைப்பு டைய அம்மெய்த்தொண்டரின் செயலை உலகறியுமாறு செய்பவரான இறைவரின் திருவருளினால், வீடு நிறைந்த மிகப் பெரிய செல்வமா னது, மேன் மேலும் பெருகுதற்குரிய தொழில் வளம் குறையவே, உலகில் அவருடைய இருவினைகளும் மாண்டன போல, அவர்தம் செல்வமும் அவர் மாட்சிமையடையுமாறு நீங்கியது. *** செல்வம் நீங்கப் பலரும் தாழ்வர்; இது உலகியல். ஆனால் செல்வம் நீங்க இவ்வடியவர் உயர்ந்தனர் என்றார். இஃது அருளியலாதலின், ஓடும் கவந்தியுமே உறவாகத் தேடும் பொருளும் சிவமேயாக வாழும் வாழ்விற்குப் பொருளும் வேண்டுமோ வேண் டாததன்றோ?
திருமலிசெல் வத்துழனி
தேய்ந்தழிந்த பின்னையுந்தம்
பெருமைநிலைத் திருப்பணியில்
பேராத பேராளர்
வருமரபில் உள்ளோர்பால்
எண்ணெய்மா றிக்கொணர்ந்து
தருமியல்பில் கூலியினால்
தமதுதிருப் பணிசெய்வார்.

[ 9]


பல்வகையானும் பெருகிவந்த தம் செல்வப் பெருக்குத் தேய்ந்து அழிந்த பின்பும், தம் பெருமை பொருந்திய நிலைத்த அத்திருத்தொண்டினின்றும் மாறுபடாத தன்மையுடைய அவர், தம் மரபில் வந்த செல்வம் உள்ளவரிடத்தில் எண்ணெய் பெற்று, அதனை விற்றுத் தந்து, அதனால் அவர் அளிக்கும் கூலியைக் கொண்டு தம் திருத்தொண்டைச் செய்து வந்தார். *** செல்வத்துழனி - செல்வப்பெருக்கு.
வளமுடையார் பால்எண்ணெய்
கொடுபோய்மா றிக்கூலி
கொளமுயலும் செய்கையும்மற்
றவர்கொடா மையின்மாறத்
தளருமனம் உடையவர்தாம்
சக்கரஎந் திரம்புரியும்
களனில்வரும் பணிசெய்து
பெறுங்கூலி காதலித்தார்.

[ 10]


செல்வ வளம் உடையவரிடத்தில் எண்ணெய் பெற்று விற்று, அதனால் பெறும் கூலியைக் கொண்டு செய்து வந்த அச் செயலும், அவர்கள் எண்ணெய் கொடாமையினால் இல்லையாகி யது. அதனால் தாம் ஆற்றும் பணிக்குத் தடை வருதலால், தளரும் மனம் உடைய அவர், செக்கு ஆடும் இடத்தில் வரும் பணியைச் செய்து அதனால் பெறும் கூலியைப் பெற விரும்பியவராய்,
குறிப்புரை:

Go to top
செக்குநிறை எள்ளாட்டிப்
பதமறிந்து திலதயிலம்
பக்கமெழ மிகவுழந்தும்
பாண்டில்வரும் எருதுய்த்தும்
தக்கதொழிற் பெறுங்கூலி
தாங்கொண்டு தாழாமை
மிக்கதிரு விளக்கிட்டார்
விழுத்தொண்டு விளக்கிட்டார்.

[ 11]


செக்கு நிறையும் அளவில் எள் இட்டு ஆட்டிப், பதம் தெரிந்து, எள்ளினின்றும் எண்ணெய் பக்கங்களில் சிந்தாது, விழிப்பொடு உழைத்தும், செக்கை வட்டமாய்ச் சுற்றி வரும் எருது களைச் செலுத்தியும், உரிய முயற்சியால் செய்யும் அத்தொழில்களால் பெறும் கூலியைத் தாம் கொண்டு, தவறாது நிறைந்த விளக்குகளை எரித்தார்; அதனால் 'தூய திருத்தொண்டின் திறம் இது' என உலகிற்கு விளக்கலானார். *** திலம் - எள். தைலம் - நெய். எள்ளிலிருந்து எடுக்கப் பெறும் நெய் எண்ணெய் ஆயிற்று. இச்சொல் காலப் போக்கில் வேறு பல பொருள்களிலிருந்து எடுக்கும் நெய்க்கும் பொதுப் பெயராயிற்று. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.
அப்பணியால் வரும்பேறும்
அவ்வினைஞர் பலருளராய்
எப்பரிசுங் கிடையாத
வகைமுட்ட இடருழந்தே
ஒப்பில்மனை விற்றெரிக்கு
முறுபொருளும் மாண்டதற்பின்
செப்பருஞ்சீர் மனையாரை
விற்பதற்குத் தேடுவார்.

[ 12]


திலம் - எள். தைலம் - நெய். எள்ளிலிருந்து எடுக்கப் பெறும் நெய் எண்ணெய் ஆயிற்று. இச்சொல் காலப் போக்கில் வேறு பல பொருள்களிலிருந்து எடுக்கும் நெய்க்கும் பொதுப் பெயராயிற்று. இவ்விரு பாடல்களும் ஒரு முடிபின.
குறிப்புரை:

மனமகிழ்ந்து மனைவியார்
தமைக்கொண்டு வளநகரில்
தனமளிப்பார் தமையெங்கும்
கிடையாமல் தளர்வெய்திச்
சினவிடையார் திருக்கோயில்
திருவிளக்குப் பணிமுட்டக்
கனவினும்முன் பறியாதார்
கையறவால் எய்தினார்.

[ 13]


உள மகிழ்வுடன் மனைவியாரைக் கைக்கொண்டு, வளம் வாய்ந்த அந்நகரத்தில் பொருள் கொடுப்பவர் எவரும் இல்லாமையால் தளர்வடைந்து, சினமுடைய காளையையுடைய இறைவரின் கோயிலில் திருவிளக்கு இடும்பணி முட்டுதலை இதற்கு முன்பு கனவிலும் அறியாத நாயனார், வேறு செயலற்ற தன்மையால் திருக்கோயிலின்கண் வந்து சேர்ந்தார். *** இவ்விரு பாடல்களும் ஒருமுடிபின.
பணிகொள்ளும் படம்பக்க
நாயகர்தங் கோயிலினுள்
அணிகொள்ளுந் திருவிளக்குப்
பணிமாறும் அமையத்தில்
மணிவண்ணச் சுடர்விளக்கு
மாளில்யான் மாள்வனெனத்
துணிவுள்ளங் கொளநினைந்தவ்
வினைமுடிக்கத் தொடங்குவார்.

[ 14]


தம்மை ஆட்கொண்டு தம் பணியை ஏற்கும் 'படம் பக்க' நாதரின் கோயிலுள், அழகு நிறைந்த விளக்கிடும் திருப்பணி யைச் செய்ய நின்ற அவ்வமயத்தில், 'மணி போன்ற சுடர்களை யுடைய விளக்கு எரிக்கப்படாமல் தடைப்படுமாயின், நான் இறந்து விடுவதே செய்யத்தக்கது' என்ற துணிவை மனம் பொருந்த எண்ணி, அச்செயலை முடிக்கத் தொடங்குவராகி,
குறிப்புரை:

திருவிளக்குத் திரியிட்டங்கு
அகல்பரப்பிச் செயல்நிரம்ப
ஒருவியஎண் ணெய்க்குஈடா
உடல்உதிரங் கொடுநிறைக்கக்
கருவியினால் மிடறரிய
அக்கையைக் கண்ணுதலார்
பெருகுதிருக் கருணையுடன்
நேர்வந்து பிடித்தருளி.

[ 15]


திருவிளக்குகளுக்கு எல்லாம் திரியை இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி, அச்செயல் நிரம்பத் தடையாகும் எண்ணெய்க்கு ஈடாய்த், தம் உடலில் நிறைந்த குருதியைக் கொண்டு நிறைக்க எண்ணிக் கருவி கொண்டு தம் கழுத்தை அரியமுற்பட, அங் ஙனம் அவர் அரிகின்ற கையை, நெற்றிக் கண்ணையுடைய இறைவர், பெருகும் கருணையுடனே வெளிப்பட்டுத் தோன்றி, அச் செயலைச் செய்யவிடாமல் பற்றிப்பிடித்து,
குறிப்புரை:

Go to top
மற்றவர்தம் முன்னாக
மழவிடைமேல் எழுந்தருள
உற்றவூ றதுநீங்கி
ஒளிவிளங்க வுச்சியின்மேல்
பற்றியஞ் சலியினராய்
நின்றவரைப் பரமர்தாம்
பொற்புடைய சிவபுரியில்
பொலிந்திருக்க அருள்புரிந்தார்.

[ 16]


அவ்வடியவர் முன்பாக, இளமையுடைய ஆனேற் றூர்தியின் மேல் எழுந்தருளி, அரிந்ததால் ஆய அப்புண் நீங்கி ஒளி பெற்று விளங்க, உச்சியின் மேல் கைகுவித்து நின்றஅந்நாயனாரை சிவபெருமான் அழகிய சிவலோகத்தில் விளங்க வீற்றிருக்குமாறு அருள் புரிந்தார். *** இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின.
தேவர்பிரான் திருவிளக்குச்
செயல்முட்ட மிடறரிந்து
மேவரிய வினைமுடித்தார்
கழல்வணங்கி வியனுலகில்
யாவரெனாது அரனடியார்
தமையிகழ்ந்து பேசினரை
நாவரியுஞ் சத்தியார்
திருத்தொண்டின் நலமுரைப்பாம்.

[ 17]


இம்மூன்று பாடல்களும் ஒருமுடிபின. ***

Thevaaram Link  - Shaivam Link
Other song(s) from this location:

This page was last modified on Sun, 31 Mar 2024 02:36:43 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai song